Tuesday, November 17, 2009

காற்றின் திசை...

முதல் பிறந்தநாள் வரப்போகிறது என் மகனிற்கு. என்னுடைய சிறிய வயதில் எனக்கு பிறந்தநாள் என்றாலே ஒரே கொண்டாட்டம் தான். பள்ளி சீருடை தவிற, வண்ண புத்தாடை கிடைக்க வருடத்திற்கு இரண்டே தருணம் தான். ஒன்று தீபாவளி, மற்றொன்று பிறந்தநாள். தமிழனாக இருந்தும், விவசாய குடும்பத்தில் பிறந்திருந்தும் ஏனோ தமிழர் திருநாளாம் பொங்கலன்று புத்தாடை உடுத்துவது எனக்கு விபரம் தெரிந்த வயது முதல் எங்கள் பகுதியில் வழக்கில் இல்லை. பிறந்தநாளிற்கு முதல் நாள் இரவு உறக்கம் வருவது என்பது அவ்வளவு கடினம். நாளை காலை சீருடை அனியத் தேவை இல்லை. வண்ண உடை அணிந்து பை நிறைய மிட்டாய்களுடன் பள்ளிக்குச்செல்லாம். காலையில் பள்ளியில் தொழுகை கூட்டம் நடக்கும் போது மேடையில் ஏறி எல்லோருக்கும் தெரியுமாரு நிற்கலாம்,  நம்மை வாழ்த்திப் பாடுவார்கள், யாரும் எந்த காரணத்திற்காகவும் திட்ட மாட்டார்கள் இது போன்ற பல நினைவுகள் வந்து மோதிச் சென்று கொண்டிருக்கும். பொதுவாக பிறந்தநாள் என்பது தன்னை சிறப்பானவராக கருதிக்கொள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்கும் வாய்ப்பு. இந்தக் குழந்தைகள் மூன்று முதல் முப்பத்தொன்பது வரை பல வயதுகளில் இருக்கிறார்கள்.



சிறுவயதில் மிட்டாய், வண்ண புத்தாடை என்று தொடங்குகின்ற இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் பின்னர் படிப்படியாக பிறந்தநாள் வாழ்த்து அட்டை,  அழகிய வண்ண படங்கள், CERAMIC பொம்மைகள்,  பிறந்தநாள் விருந்து என்று படிப்படியாக பரிணாம வளர்சி அடைந்து வருவது இயல்பான ஒன்று. எனக்கு தெரிந்து நான் வழங்கிய பிறந்தநாள் மிட்டாய்கள் nutrine, parrys, Lacto King போன்ற நாலனா எட்டனா மிட்டாய்களே. சில பிறந்தநாளன்று கற்கண்டு கட்டிகளும், புளிப்பு மிட்டாய்களும் கொடுத்ததும் நினைவிருக்கிறது.

இப்பொழுது அலுவலகத்தில் உடன் பணிபுரிகின்ற தோழி ஒருவர் தன் மகளின் பிறந்தநாள் விழாவினை பற்றி கூறிய போது தான் நான் இன்னும் மிக பழைமையான உலகில் இருக்கிறேன் என்பதனை உணர்ந்தேன். பள்ளி வகுப்பு தோழர்/தோழிகள், தெரிந்த நண்பர்கள் எல்லோருக்கும் விலை உயர்ந்த இனிப்புக்கள், வலை தளங்களில் தேடி எடுத்த தனி வடிவங்களுடன் கூடிய சிறப்பு மிகுந்த ஆடை அணிகலன்கள், மேலும் பெரிய பிறந்தநாள் விருந்து, இன்னும் பல பல என்று நினைத்துப்பார்கையிலேயே அதிர வைக்கிறது.

இந்த பிறந்தநாள் கொண்டாட்டங்களில் பாதி விடயங்களை பெற்றோர்கள் தாங்களாகவே செய்கிறார்கள், மற்ற பாதி குழந்தையின் கட்டாய வேண்டுகோளாக இருக்கிறது. குழந்தை உடன் படிப்பவர்களிடம் இருந்து கற்றுக்கொள்கிறது, அவர்களை விட ஒரு பங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. குழந்தையின் விருப்பம் தவறென்ற போதும் குழந்தையின் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்ய பெற்றோருக்கும் மனமில்லை. இப்படி கேட்டதெல்லாம் சட்டென கிடைத்துவிடும் வரம் பெற்ற குழந்தைகளின் வளர்ச்சி எங்கனம் அமைகின்றது.  அவர்களுக்கு தோல்வியை ஏற்கும் மனப்பாங்கு அமைவது சாத்தியமா? வாழ்வில் வெற்றி என்பதை அவர்கள் எவ்வாறு புரிந்துகொள்ளுவார்கள்? வெரும் பொருளும் பொருள் சார்ந்த விடயங்களுமே அவர்களின் இலக்காக அமையும்.  அன்பு சகமனித உறவு என்பதெல்லாம் அவர்களிடம் காத தூரம் போய் நிற்கவேண்டிவரும்.

சாதாரன ஆட்டோ ஓட்டுனரின் மகனான நான் இப்படிப்பட்ட வளமையான பிறந்தநாள் மற்றும் தீபாவளி கொண்டாட்டங்ளையக்  கண்டு மணம் ஏங்கியது ஏராளம். இன்னொரு புறம் சில குழந்தைகள் வண்ண புத்தாடை கிடைக்காததால் பிறந்தநாள் என்று கூற வெட்கப்பட்டுக் கொண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தையே கைவிடுவதும் உண்டு.  இதை நான் மேல்நிலைப் படிப்பிற்கு நகராட்சி பள்ளியில் சேர்ந்து படித்த போது சில வகுப்பு தோழர்களிடம் கண்கூடாகக் கண்டதுண்டு. இவர்களின் மண வளர்சியும் வளமையாக அமைவது மிக கடினம். விரும்பியது எதுவுமே கிடைக்காமல் போவதால் விருப்பங்களையே விடுத்து உளம் வெம்பி தன்நம்பிக்கை குறைந்து போவதற்க்கு வாய்புக்கள் மிக அதிகம். இன்னொருவரின் யதார்த்தமான கொண்டாட்டங்கள் கூட இவர்கள் மனம் வெம்பும் தருணமாக அமையும் சூழ்நிலைக்கு தீர்வென்பது மிகச்சிக்கலானது.  இவ்வாறான வேறுபாடுகளை எங்கனம் சமன் செய்யப்போகிறோம்.

இப்படியான குழப்பங்கள் பல சரியான விடை தெரியாமலேயே என்னுள்ளே சுற்றித்திரிவதாலும் பெரியாரின் கருத்தகளின் பால் ஈர்க்கப்பட்டதாலும் பிறந்தநாள், தீபாவளி போன்ற என்னை சிறுவயதில் ஏங்க வைத்த பிறரை இன்றும் ஏங்க வைத்துக்கொண்டிருக்கிற கொண்டாட்டங்களிடம் மெல்ல மெல்ல பகைமை பாராட்டத் தொடங்கி விட்டேன்.

சரி பிறந்தநாள், திருவிழா போன்ற கொண்டாட்டங்களை இனிமேல் எல்லோரும் விட்டுவிடலாமா. இப்படியே கணக்குப் பார்த்தால் எந்த ஒரு திருவிழாவும், பண்டிகையும், நோம்பி நொடியும், திருமண நாளும் கொண்டாட முடியாதே. வாழ்க்கை ஒரு இரசிப்புத்தன்மை இல்லாமல் போய்விடுமே. இவ்வாறான வாதத்தினையும் மறுப்பதற்கில்லை.

திருவிழாக்களும், மற்ற பிற தினங்களும் கொண்டாடுவதற்கு ஒவ்வொரு கால கட்டங்களிலும் ஒவ்வொரு தேவை இருந்திருக்க வேண்டும். பெரும்பாலும் கிராமங்களில் வரும் திருவிழாக்கள் வெயில் காலங்களிலேயே வரும். வெயில் காலங்களில் விவசாய வேலை ஒன்றும் இருக்காது என்பதால் உறவினர் வீடுகளுக்குச்செல்ல, நல்ல உணவு உண்ண, கொண்டாட இதுதான் நல்ல நேரம் என்று அமைத்துவைக்கப்பட்ட ஒரு நினைவுறுத்திக்குச் சமமானதாகவே இத்திருவிழாக்களின் நோக்கம் தோன்றுகிறது. அது போலவே தான் நான் உன்னை மறந்துவிடவில்லை, உன்னிடம் இன்னும் அன்போடு தான் இருக்கிறேன் என்று நினைவுபடுத்த இதுபோன்ற பிறந்த தினங்களும் இன்ன பிற தினங்களும் கொண்டாடவேண்டிய தேவை சிலருக்கு உள்ளது. அடிக்கடி சந்திக்க முடியாவிட்டால் கூட ஒன்று சேர்ந்து மகிழ மற்றும் பகிர்ந்து கொள்ள ஒரு தருணமாக விருந்துகளும் வாய்ப்பாக அமையக்கூடும். மேலும் புதிதாக நட்பையும் உறவுகளையும் வளர்த்துக்கொள்ள விரும்புகிறவர்களுக்கும் இது ஒரு சரியான வாய்ப்பு. திருமணத்திற்கு முன்பு கவிதா(இப்பொது என் மனைவி) எனக்கு கூறிய பிறந்த தின வாழ்த்தை என்னால் என்றும் மறக்க இயலாது. அதுவே பின்னர் எங்களுக்குள் ஏற்பட்ட மற்ற பிற சந்திப்புக்களுக்கு காரணமாகவும் அமைந்தது. காதலும் வளர்ந்தது.

கொண்டாடுவதில் எல்லோருக்கும் ஒரே விதமான வழிமுறைகள் இருக்க வேண்டும் என்பதில்லை. அவரவர் சூழ்நிலைக்கேற்ப்ப, அவரவர் வசதிக்கேற்ப்ப, அவரவர் தேவைக்கேற்ப்ப இக்கொண்டாட்டங்கள் அமையலாம். கால மாற்றத்திற்கு ஏற்றவாறு மாறும் தேவைகளின் மாற்றத்தையும் உணர்ந்து அமையும் இவ்வாறான சில கொண்டாட்டங்களை வரவேற்பதில் எவ்வித தவறுமில்லை. இருந்த போதும் இவற்றில் எதுவும் சடங்காகிப்போகிற போதும், தகுதிக்கு மீறி பிறரை பார்த்து தானும் அவ்வாறு செய்ய முயற்சி செய்கிறபோதும், தேவையில்லாத எதிர்பார்ப்புக்களை உருவாக்கிக்கொள்கிறபோதும், தேவையில்லாத மண உளைச்சளை ஏற்படுத்துகிறபோதும், போதும்..போதும்.., என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.

பிறந்தநாள் என்றதும் இவ்வாறான பல அலைமோதும் கருத்துக்களினால் குழம்பிபோயிருந்த நானும், மிகத்தெளிவாக இருந்த கவிதாவும்  எங்கள் மகனின் பிறந்தநாளை எவ்வாறு கொண்டாடுவது என்று ஆலோசிக்கத் தொடங்கினோம். அப்பொழுது கவிதா கூறிய ஒரு கருத்து எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தக்கருத்தானது, ஒரு ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்குச் செல்வது, அங்கு சென்று எங்கள் மகனின் முதல் பிறந்த நாளை களிப்பது என்பதே.  இதுவும் ஒரு சடங்காகிக்கொண்டு வருகிறதோ என்று எழுந்த எண்ணங்களை ஒருபுரம் ஒதுக்கித்தள்ளிவிட்டு குழந்தைகள் காப்பகத்தில் மகனின் முதல் பிறந்தநாளை செலவிட என் முழு மனதையும் செலுத்தத் தொடங்கினேன். பெங்களுருவில் வசிக்கும் எனக்கு குழந்தைகள் காப்பகம் என்றதுமே நினைவிற்கு முதலில் தோன்றியது IGIA-INDIRA GANDHI INTERNATIONAL ACADEMY. பெயரை வைத்து அனுமானிக்க முடியாத இது ஒரு ஈழ தமிழர்களுக்கான மறுவாழ்வு மையம். குழந்தைகள் படிப்பதுவும் அங்கேயே. வசிப்பதுவும் அங்கேயே. பகலில் அதுவே வகுப்பறை. இரவில் அதுவே விடுதி அறை. நாங்கள் நடத்திக்கொண்டிருக்கும் வாழை அமைப்போடு(www.vazhai.org) தொடர்புடைய நண்பர்கள் சிலர் வெகு தீவிரமாக அங்கே கடமையாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அங்கேதான் எனது மகனின் முதல் பிறந்தநாளை கொண்டாடுவதாக உள்ளோம். பிறந்தநாள் இப்போது எனக்கு அவ்வளவு குழப்பமானதாக இல்லை.

முதல் பிறந்தநாள் கொண்டாடிய விதத்தை எவ்வளவு காலம் ஆனபோதும் ஏதோ ஒரு விதத்தில் அடிக்கடி மகனிடம் விவரிக்க நேரும். இதுபோல இன்னும் பிற சம்பவஙகளும் அமையும் போது அதுவே அவனுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும் வாய்ப்புக்கள் மிக அதிகம். குழந்தைகள் இறகு போல. காற்றடிக்கும் திசையில் இறகு பறக்கும்.  இருப்பினும், காற்றின் திசை நம் கைகளில்.

9 comments:

பிரபாகர் said...

பிறந்த நாள் மட்டுமல்ல அன்பு, எல்லாம் இன்று மாறிவிட்டது. நன்றாக எழுதுகிறீர்கள்....

வாழ்த்துக்கள்...

Word Verification எடுத்து விடுங்களேன்?

பிரபாகர்.

நவீனன் said...

//காற்றடிக்கும் திசையில் இறகு பறக்கும். இருப்பினும், காற்றின் திசை நம் கைகளில்.//

தன்னம்பிக்கையூட்டும் வைர வரிகள் :)

Prathap Kumar S. said...

நல்ல பதிவு... அதோட ரொம்ப பெரிய பதிவு...

எந்த ஊருநீங்க... முன்பு எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு?

லிங்காபுரம் சிவா said...

// என்னுடைய சிறிய வயதில் எனக்கு பிறந்தநாள் என்றாலே ஒரே கொண்டாட்டம் தான்.//

சிறிய வயதில் na எந்த வயசுல? :)

லிங்காபுரம் சிவா said...

என்னுடைய எண்ணம் உங்களுடன் முழுமையாக ஒத்து போகிறது...

தொடர்ந்து எழுதுங்கள்... உங்கள் மகனுக்கு என்னுடைய இனிய‌ பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

Vidhoosh said...

//இன்னும் பிற சம்பவஙகளும் அமையும் போது அதுவே அவனுக்கு ஒரு வழிகாட்டியாக //
//குழந்தைகள் இறகு போல. காற்றடிக்கும் திசையில் இறகு பறக்கும். இருப்பினும், காற்றின் திசை நம் கைகளில்.//

ரொம்ப சந்தோஷமாக இருக்குங்க படிக்க. இத்தனை விசாலமான மனம் உடைய உங்களுக்கு, உங்கள் மகனும் நிச்சயம் பெருமையே தேடித் தருவான். உங்கள் நல்ல எண்ணங்கள் பலிக்க இறைவன் துணை இருக்கட்டும். உங்கள் மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

word verification-னை நீக்குங்களேன்.


-வித்யா

ஹேமா said...

அன்பு,உங்கள் மகனுக்கு என் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.அருமையான பதிவு.கடைசி வரிகள் மனதைத் தொட்டது.

பூங்குன்றன்.வே said...

நல்ல பதிவு சிவா.நெகிழ வைத்து.உங்கள் அன்பு மகனுக்கு வாழ்த்துக்களும்,முத்தங்களும்....

அன்புசிவம்(Anbusivam) said...

கடந்த சனிக்கிழமை அன்று IGIA'விற்கு சென்று அணைத்து குழந்தைகளுடனும் மதியம் உணவு உண்டு திரும்பினோம். பிறந்தநாள் வரும் புதன் கிழமை வருவதால் பள்ளி வகுப்புகளுக்கு இடையூறு ஏற்படும் என்று கருதி கடந்த சனிக்கிழமையே சென்றுவிட்டோம். மாணவர்கள் மிகுந்த அன்புடன் பழகினர். பள்ளி சூழல் சாதாரண கிராமப்புற அரசு பள்ளிகளை ஒத்த வெகு குறைந்த வசதிகள் கொண்டதாகவே உள்ளது. வகுப்பறையின் சுவர்கள் கார்பரேட் கம்பெனிகளின் சுண்ணாம்பு பூச்சை எதிர்பார்த்து காத்திருக்கிறது. இனி அடிக்கடி செல்ல வேண்டி வரும் என்று தோன்றுகிறது.

Post a Comment

உங்கள் எண்ணங்களை பகிர்ந்துகொள்ள...